tamil pages of magudadheeban 
 

மெல்லத் தமிழ் இனிச் . . .


பல்தொழில் நுட்பக் கல்லூரியிலேபொருட்காட்சி. எங்கள் தொலைபேசி நிலையத்தில் இருந்து ஒரு ஸ்டால் போட்டிருந்தோம். பள்ளிகள் கல்லூரிகளில் இருந்து மாணவர் கூட்டம் அள்ளிச் சாய்ந்தது.

எங்கள் ஊர்க் கல்லூரியின் சிறப்பு இங்கிலாந்து வரை பரவி இருக்கிறது போலும். அனேகமாக அந்த மாணவர்கள் கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டியில் இருந்து வந்திருக்க வேண்டும். தட்ப வெப்பம் வேர்த்து விறுவிறுக்க இருந்த போதும் இறுக்கமாகக் கழுத்துப்பட் 'டை' கட்டி இருந்தனர். எல்லோர்க்கும் ஒரே மாதிரி மிகவும் உயர்ந்த இரக மடிப்புக் குலையாத சீருடை. அந்த நச நச வேர்வையிலும் காலிலே ஷூ வேறு.

இவர்களுக்கெல்லாம் இந்த வெக்கை வேர்வையில் கால் விரல் எப்படி அழுகாமல் (அதாவது அழாமல்) இருக்கிறது என்பது ஆச்சரியம். எல்லார் வாயிலும் நாக்குக்கு பதிலாக நுனித்து வரும் ஆங்கிலம். முகங்களைப் பார்த்து மாம்பழக் கன்னம் எனத் தமிழ்நாட்டுக் கனியால் வர்ணித்தால் அவர்களை தமிழர்கள் என ஒத்துக் கொண்டவனாவேன். எனவே அவை ஆப்பிள் கன்னங்கள் இல்லையேல் ஏதோ வெளிநாட்டுப் பழங்கள் என வைத்துக் கொள்ளுங்கள். முகங்களிலே சொல்லி வைத்தமாதிரி பணக்களை சொட்டியது. திருவிளையாடல் காலத்து தருமி இருந்திருந்தால் ஒரு பத்துச் சொட்டாவது பிடித்திருப்பான். நக்கீரனிடம் போய் அல்லாடி இருக்க மாட்டான்.

கடைசியிலேதான் தெரிந்தது, அட, எல்லாம் நம்மூர் மாணவர்கள் என்று